சிங்கப்பூர் PIE-யில் பயங்கர விபத்து..!! நூலிழையில் உயிர் தப்பிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!

சிங்கப்பூர் PIE-யில் பயங்கர விபத்து..!! நூலிழையில் உயிர் தப்பிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!

சிங்கப்பூரின் பான்-ஐலண்ட் எக்ஸ்பிரஸ்வேயில் (PIE) மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற காரின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில், அருகில் சென்று கொண்டிருந்த கனரக வாகனத்தில் சிக்காமல் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

விபத்து குறித்து இணையத்தில் பரவை வரும் காணொளியின்படி, கருப்பு நிற கார் ஒன்று PIE-யில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வேகத்தைக் குறைத்ததாகத் தெரிகிறது.

அதன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், போதிய நேரத்தில் நிறுத்த முடியாமல் காரின் பின்புறத்தில் மோதியது.

மோதலின் வேகத்தில் மோட்டார் சைக்கிள் முன்னோக்கி கவிழ்ந்ததுடன், அதில் சென்ற ஓட்டுநரும் தூக்கி வீசப்பட்டு அருகிலிருந்த இடது பாதையில் விழுந்தார்.

ஓட்டுநர் விழுந்த அதே நேரத்தில், இடது பாதையில் ஒரு கனரக வாகனம் சென்று கொண்டிருந்தது.

காணொளியில், கனரக வாகனம் ஓட்டுநருக்கு மிக அருகில் கடந்து செல்வது தெரிகிறது. இதனால் அவர் சில நொடிகளில் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியதாக தெரிகிறது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) செப்டம்பர் 9ஆம் தேதி பிற்பகல் சுமார் 3:45 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PIE-யில் சாங்கி நோக்கிச் செல்லும் வழியில், புக்கிட் திமா வெளியேறும் வழிக்கு முன்பாக இந்த விபத்து ஏற்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்து ஒருவர் சிகிச்சைக்காக டான் டாக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்து தொடர்பான மேலதிக விவரங்களை அறிய காவல்துறையிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சாலையில் ஒரு சிறிய கவனக்குறைவும் சில நொடிகளில் மிகப்பெரிய விபத்தாக மாறிவிடும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் முன்னால் செல்லும் வாகனங்களிடம் போதிய பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.