எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் தொலைபேசி வழியாக நடக்கும் மோசடிகள் அதிகரிப்பு..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த மாதம் 2,900க்கும் அதிகமான மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமாக S$53.4 மில்லியனுக்கு மேல் இழந்துள்ளனர்.
பதிவான வழக்குகளில் சுமார் 30 சதவீதம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC), யூனியன் பே போன்ற நிதி நிறுவனங்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் ஆள்மாறாட்டம் செய்து மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் ஆகும்.
சிங்கப்பூர் மத்திய காவல் பிரிவு, டிசம்பர் 23 அன்று பேஸ்புக்கில் டிசம்பர் மாத மோசடித் தரவுகளை வெளியிட்டது. அதில், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்த 190க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றின் மொத்த இழப்பு S$15.3 மில்லியனை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அதிகமாக காணப்படும் அரசு அதிகாரி மோசடிகளில், பொதுவாக இரண்டு பேர் இணைந்து செயல்படுவதாக காவல்துறை விளக்கியுள்ளது. இதில் முதல் மோசடி செய்பவர் காப்பீட்டு அல்லது கட்டண நிறுவன பிரதிநிதியாக ஆள்மாறாட்டம் செய்து, பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொண்டு, அவர் ஏதோ ஒரு துணை நிறுவனத்திடம் காப்பீடு எடுத்துள்ளதாகக் கூறுவார்.
இதை பாதிக்கப்பட்டவர் மறுத்தால், அழைப்பு மற்றொரு மோசடி செய்பவரிடம் மாற்றப்படும். பின்னர் இரண்டாவது நபர், காவல்துறை அதிகாரி அல்லது சிங்கப்பூர் நாணய ஆணையம் போன்ற அரசு அமைப்பின் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, பணமோசடி அல்லது அடையாளத் திருட்டு போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டுவார்.
இதனைத் தொடர்ந்து,பாதுகாப்பான கணக்கிற்கு பணத்தை மாற்றுமாறோ அல்லது விசாரணைக்காக ரகசிய அதிகாரியிடம் பணம் அல்லது மதிப்புமிக்க பொருட்களை ஒப்படைக்குமாறோ அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் ஒருபோதும் தொலைபேசி மூலம் பணம் மாற்றக் கோர மாட்டார்கள் என்றும், அடையாளத்தைச் சரிபார்க்காமல் அந்நியர்களிடம் பணம் அல்லது மதிப்புமிக்க பொருட்களை ஒப்படைக்கக் கூடாது என்றும் போலீசார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
பொது மக்களுக்கு மோசடி தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின்,மோசடி எதிர்ப்பு ஹாட்லைனை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.