எச்சரிக்கை..!! பியூட்டி பார்லரில் அதிகரிக்கும் மோசடி..!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த ஆண்டு அழகுச் சேவைத் துறைக்கு எதிரான நுகர்வோர் புகார்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் சங்கம் (CASE) தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது,இந்தத் துறையில் புகார்கள் 76.2% உயர்ந்துள்ளன.
2025ஆம் ஆண்டில் மட்டும் அழகுத் துறையை எதிர்த்து 2,113 புகார்கள் பதிவாகியுள்ளதாக CASE வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம் நுகர்வோர் சந்திக்கும் பிரச்சினைகள் தீவிரமாகி வருவது வெளிப்படையாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில்,உள்ளூர் சங்கிலி மசாஜ் பார்லர் வான் யாங் திடீரென மூடப்பட்ட சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அழகுத் துறையில் முன்பணம் செலுத்திய நுகர்வோருக்கு S$2,129,979 அளவிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், ஆன்லைன் பயண முகவர் நிறுவனங்களுக்கு எதிரான புகார்களும் அதிகரித்துள்ளன. 2024இல் 380 ஆக இருந்த புகார்கள், 2025இல் 567 ஆக உயர்ந்துள்ளன. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததே இதற்குக் காரணம் என CASE விளக்கம் அளித்துள்ளது.
அதே நேரத்தில், புதுப்பித்தல் (Renovation) ஒப்பந்ததாரர்களுக்கு எதிரான புகார்கள் 18.2% குறைந்து 787 ஆக பதிவாகியுள்ளன. CASE Trust சான்றிதழ் கொண்ட நிறுவனங்கள் மீது நம்பிக்கை அதிகரித்ததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக, கடந்த ஆண்டு CASE-க்கு 13,786 நுகர்வோர் புகார்கள் வந்துள்ளன. இது 2024ஐ விட 3.2% குறைவு. அழகுச் சேவைகள், மின் சாதனங்கள், மின்னணுவியல், வாகனங்கள், புதுப்பித்தல் மற்றும் தொலைத்தொடர்பு துறைகள் அதிக புகார்கள் பெற்ற முதல் ஐந்து துறைகளாக உள்ளன.