சிங்கப்பூரில் சுய சிந்தனையை வலுப்படுத்தும் கல்வி மாற்றம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கல்வி அமைச்சகம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயன்பாடு கற்பித்தல் மற்றும் கற்றல் விளைவுகளை மேம்படுத்த வேண்டும் என்றும், அதனை அளவுக்கு மீறி நம்புவதால் மாணவர்களின் சிந்தனை திறன் குறையாதபடி பள்ளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மாணவர்களின் AI தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி இடையேயான தொடர்பு குறித்து தரவு உள்ளதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், அதுகுறித்த தனிப்பட்ட தகவல்கள் தற்போது இல்லை என்றும், கற்றலில் தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
கட்டுப்பாடின்றி பயன்படுத்தினால், மாணவர்கள் அடிப்படைக் கருத்துகளைப் புரிந்துகொள்வதில் பலவீனம் ஏற்பட்டு, உயர்நிலை சிந்தனை வளர்ச்சி பாதிக்கப்படலாம் என சர்வதேச ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதனால், மாணவர்கள் உறுதியான அடித்தளம் பெறும் வரை இத்தகைய கருவிகள் படிப்படியாக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகின்றன. தொடக்கப்பள்ளிகளில் அனுபவக் கற்றலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், மேல்நிலைகளில் ஆசிரியர் மேற்பார்வையில் பொறுப்பான பயன்பாடு கற்பிக்கப்படுகிறது.
மேலும், தேர்வுகளில் இத்தகைய தொழில்நுட்பப் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அடிப்படை அறிவில் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்ய தொடர்ந்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாணவர்கள் தங்கள் சிந்தனை திறனை சுயமாக வளர்த்துக்கொள்ளவும், பொறுப்புடன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் கல்வித்துறை தொடர்ந்து வழிகாட்டுகிறது.