சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களின் பின்புறக் கண்ணாடிகளை குறிவைத்து நடைபெற்ற தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக, 20 வயது இளைஞனையும் 18 வயது சிறுவனையும் காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31 முதல் இந்த ஆண்டு ஜனவரி 15 வரை, ஜூரோங் வெஸ்ட், சோவா சூ காங் மற்றும் புக்கிட் பஞ்சாங் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த பல மோட்டார் சைக்கிள்களில் இருந்து பின்புறக் கண்ணாடிகள் திருடப்பட்டதாக போலீசாருக்கு பல புகார்கள் வந்தன.
சம்பவ இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறை, சந்தேக நபர்களை அடையாளம் கண்டு, ஜூரோங் மாவட்ட அதிகாரிகள் நேற்று (16.01.26) இருவரையும் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் பாகங்களைத் திருட சதி செய்த குற்றச்சாட்டில், 20 வயது இளைஞன் மீது இன்று (17.01.26) நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
18 வயது சிறுவன் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.அதே நேரத்தில், மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களை நல்ல வெளிச்சம் உள்ள பகுதிகளில் நிறுத்துதல், திருட்டு எதிர்ப்பு அலாரங்களை நிறுவுதல், தார்பாய்களால் மூடி பாதுகாப்பாக வைத்தல் மற்றும் கூடுதல் பூட்டுகளை பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் திருட்டு அபாயத்தை குறைக்க உதவும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.