சர்ச்சைக்குள்ளான பள்ளி உணவுப் பெட்டி...!!! முன்னாள் அதிபர் வெளியிட்ட பதிவு..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஹ்வா சோங் நிறுவனத்தில் வழங்கப்பட்ட முன் தயாரிக்கப்பட்ட மதிய உணவுப் பெட்டிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் எழுந்த சர்ச்சைக்கு இடையே, முன்னாள் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் அந்த உணவுகளை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை ஹ்வா சோங் நிறுவனத்தின் மதிய உணவுப் பெட்டியின் புகைப்படம் ரெடிட் தளத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அதன் ஊட்டச்சத்து தரம் குறித்து இணையத்தில் பரவலான விவாதம் எழுந்த நிலையில், ஹலிமா யாக்கோப் தனது ஃபேஸ்புக் பதிவில் உணவு நன்றாக இருந்ததாகவும், அது தனது பள்ளிப் பருவ நாட்களை நினைவுபடுத்தியதாகவும் கூறினார்.
அப்போது உணவு எளிமையாகவும்,குறைந்த தேர்வுகள் மற்றும் சிறிய அளவுகளுடன் இருந்ததாகவும், பொருளாதார நிலை காரணமாக அதுவே வழக்கமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த ஹ்வா சோங் நிறுவனம், இணையத்தில் வெளியான புகைப்படங்கள் உணவின் உண்மையான விநியோகம் அல்லது அளவை சரியாக காட்டவில்லை என்றும், பள்ளியின் முன் தயாரிக்கப்பட்ட மதிய உணவுப் பெட்டிகள் ஷின் காங் குழுமத்தால் வழங்கப்படுவதுடன், சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டவை என்றும் தெரிவித்தது.
மேலும், இந்த உணவுப் பெட்டிகள் கல்வி அமைச்சகம் மற்றும் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப தயாரிக்கப்படுவதாக ஷின் காங் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.