உலக நிச்சயமற்ற சூழலிலும் சிங்கப்பூரில் குவிந்த முதலீடுகள்..!!
சிங்கப்பூர்: உலகளவில் பொருளாதார நிச்சயமற்ற நிலையும், வர்த்தக பாதுகாப்பு போக்கும் அதிகரித்து வரும் வேளையிலும், கடந்த ஆண்டு சிங்கப்பூர் அதிகமான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையையும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
2025ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மொத்தம் S$14.2 பில்லியன் மதிப்பிலான நிலையான சொத்து முதலீட்டுக் கடப்பாடுகளை (FAI) பெற்றுள்ளது. இது 2024ஆம் ஆண்டை விட 5.2 விழுக்காடு அதிகம் என சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் (EDB) தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டில் S$12.7 பில்லியனும், 2024ஆம் ஆண்டில் S$13.5 பில்லியனும் முதலீடுகளாக ஈர்க்கப்பட்டிருந்தன. இந்நிலையில், 2025ஆம் ஆண்டு முதலீட்டு வளர்ச்சி ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த அதிகரித்த முதலீடுகள் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 15,700 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம் என்று பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் பிங் சியோங் பூன் கூறினார்.
மேலும், இந்த முதலீடுகள் சிங்கப்பூரின் பொருளாதார மதிப்புக் கூட்டலில் S$18 பில்லியன் அளவுக்கு பங்களிக்கும் என்றும், அதில் பெரும்பகுதி சம்பள உயர்வு மற்றும் நிறுவன லாப வளர்ச்சியுடன் தொடர்புடையதாக இருக்கும் என்றும் அவர் விளக்கினார்.
உலகளாவிய சவால்கள் தொடர்ந்தாலும், நீண்டகால வளர்ச்சிக்கும், தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சிங்கப்பூர் மீது உலக நிறுவனங்கள் நம்பிக்கை வைப்பது தொடரும் என EDB தெரிவித்துள்ளது. வளர்ச்சித் துறைகளை வலுப்படுத்தியும், புதிய வாய்ப்புகளை உருவாக்கியும் முதலீடுகளை ஈர்க்கும் பணியில் அரசு தொடர்ந்து செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.