சிங்கப்பூரின் பல பகுதிகளில் கனமழை...!! வானிலை மையம் புதிய எச்சரிக்கை...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இன்று (13.09.25) அதிகாலை முதல் பல பகுதிகளில் கனமழை பெய்ததால், வெப்பநிலை கணிசமாகக் குறைந்தது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, நியூட்டனில் காலை 9:30 முதல் 10:00 மணி வரை வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியஸாகச் சரிந்தது. மேலும், 11:37 மணி நிலவரப்படி, அட்மிரால்டியில் குறைந்தபட்சம் 24.1 டிகிரியாகவும், சென்டோசா தீவில் அதிகபட்சமாக 26.5 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.
பொது பயன்பாட்டு வாரியம் (PUB) இன்று காலை 8 மணியளவில் வெளியிட்ட அறிவிப்பில், காலை 8 மணி முதல் 10 மணி வரை தீவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரித்தது.
வானிலை மையத்தின் 24 மணி நேர முன்னறிவிப்பின்படி, இன்று பிற்பகல் வானிலை தெளிவாக இருக்கும். ஆனால் நாளை (14.09.25) காலை பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.