மனநல சேவைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு..! அரசு புதிய நடவடிக்கை.!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மனநல சேவைகளின் பாதுகாப்பையும் தரத்தையும் மேம்படுத்துவதற்காக உளவியல் பயிற்சிக்கான ஒழுங்குமுறை அமைப்பை சுகாதாரம் மற்றும் நலவாரிய அமைச்சகம் வலுப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐந்து முக்கிய உளவியல் சிறப்புத் துறைகள் அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ குன் தெரிவித்தார். அதிக ஆபத்து மதிப்பீடு மற்றும் தலையீட்டு பணிகளை உள்ளடக்கியதால் இந்த துறைகளுக்கு வலுவான கண்காணிப்பு அவசியம் என அவர் கூறினார்.
அரசின் மேற்பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ள ஐந்து உளவியல் துறைகள் மருத்துவ உளவியல், மருத்துவ நரம்பியல் உளவியல், தடயவியல் உளவியல், ஆலோசனை உளவியல் மற்றும் கல்வி உளவியல் ஆகும். இந்த துறைகளில் பணியாற்றும் உளவியலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த சுகாதாரப் பணியாளர்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
இந்த பதிவு நடைமுறை கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும் அதற்கான விதிமுறைகள் மற்றும் காலக்கெடுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மனநல சேவைகளில் பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில் உளவியல் கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்த பல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மருத்துவ உளவியல் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பை விரைவுபடுத்தும் புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேலும் நடைமுறை அனுபவத்தை அதிகரிக்கும் வகையில் வேலை மற்றும் கல்வி இணைந்த பயிற்சி முறையும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். இதில் 70% பணியிட அனுபவமும் 30% கல்வி பயிற்சியும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.