பள்ளிகளில் ஜனவரி முதல் அமலுக்கு வரும் புதிய விதி ..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளி நேரங்களில் மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்படுகிறது.
பெரும்பாலான பெற்றோர்கள் இந்த முடிவை வரவேற்று ஆதரிக்கின்றனர்.
சிலர், பள்ளிகள் அனுமதியின்றி மாணவர்கள் மொபைல் பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், குழந்தைகளின் திரை நேரத்தை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் தொடர வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
கல்வி அமைச்சகம் ஜனவரி முதல் வகுப்பறைகளிலும், இடைவேளைகளிலும், பாடத்திட்ட நடவடிக்கைகளிலும் ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்கிறது.
சமூக ஊடகங்களில் பலரும் இதை சரியான முடிவு என பாராட்டியுள்ள நிலையில், சிலர் மாணவர்கள் இதற்கு அடிமையாகிவிட்டதால் மாற்றம் எளிதல்ல என கருத்து தெரிவித்துள்ளனர்.
சில பெற்றோர்கள், மாணவர்கள் சாதனங்களை மறைத்து வைத்தால் கண்டறிவது சவாலாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.மறுபுறம், சிலர் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க பள்ளிகள் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.