சிங்கப்பூர்:சிங்கப்பூரில் காய்ச்சாத பாலை தொடர்ந்து குடித்து வந்த பால் பண்ணையாளருக்கு, மாடுகளிடையே காணப்படும் காசநோய்க் கிருமி தொற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிங்கப்பூரில் இந்த வகை நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அவரே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
28 ஆண்டுகளாக பால் பண்ணையாளராக பணியாற்றி வந்த 73 வயது ஆடவர்,தினமும் பாலை கறந்த உடனே காய்ச்சாமல் குடித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் அவருக்கு காசநோய் தொற்றியது கண்டறியப்பட்டதாக தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
காசநோய்க்கு வழக்கமாக வழங்கப்படும் மருந்துகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.அவருடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு காசநோய் தொற்று இல்லை என்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மாடுகளுக்குத் தொற்றக்கூடிய காசநோயால் பாதிக்கப்பட்ட ஒரே நபர் இவர்தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடுகளிடையே காணப்படும் காசநோய், காய்ச்சாத பால் அல்லது அதனுடன் தொடர்புடைய பொருட்களை உட்கொள்வதால் பரவக்கூடும் என தொற்றுநோய்த் தடுப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனால், இவ்வகை நோய் பரவல் சிங்கப்பூரில் மிகவும் அரிது என்றும்,பாலை காய்ச்சிக் குடிப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் நுண்கிருமிகள் செயலிழக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலகளவில் காசநோய் ஒரு முக்கிய பொதுச் சுகாதார சவாலாக தொடர்கிறது.2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 10.8 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டதாகவும்,சிங்கப்பூரில் 2024 ஆம் ஆண்டில் புதிதாக கண்டறியப்பட்ட காசநோயாளர்களின் எண்ணிக்கை 1,156 ஆக இருந்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.