சிங்கப்பூரில் முதியோருக்கான புதிய மருத்துவ முயற்சி தொடக்கம்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வயதான மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், முதியோரிடையே ஏற்படும் தசைச் சிதைவு காரணமான விழுதல், இயலாமை மற்றும் சுயசார்பு இழப்பு ஆகிய அபாயங்களை குறைக்க புதிய மருத்துவ முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக டான் டோக் செங் மருத்துவமனை, நாட்டிலேயே முதல் முறையாக சர்கோபீனியாவுக்கென சிறப்பு கிளினிக்கை அமைத்துள்ளது. இந்த மையம், அதிக ஆபத்தில் உள்ள முதியவர்களுக்கு ஒரே இடத்தில் முழுமையான தசை ஆரோக்கிய சேவைகளை வழங்குகிறது.
கடந்த ஜூலை மாதம் செயல்படத் தொடங்கிய இந்த கிளினிக்கில், இதுவரை 65 வயதுக்கு மேற்பட்ட சுமார் 70 முதியவர்கள் திரையிடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளனர்.
82 வயதான சென் யாஷன், கடந்த ஆண்டு வீட்டிலேயே பலமுறை சமநிலையை இழந்து விழுந்ததைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். அவருக்கு தசைச் சிதைவுடன் கூடிய எலும்பு பலவீனம் மற்றும் லேசான நரம்பியல் பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் விழுதல் மற்றும் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்தது.
மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அவர் டான் டோக் செங் மருத்துவமனையில் உள்ள தசை ஆரோக்கிய கிளினிக்கில் சேர்க்கப்பட்டார். இங்கு வழக்கமான மருத்துவமனை சிகிச்சை போல் மருந்தளிப்புடன் நிறுத்தாமல், முதியோர் தேவைக்கு ஏற்ற நீண்டகால தனிப்பயன் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
ஒவ்வொரு வருகையிலும், பேச்சு சிகிச்சையாளர் விழுங்கும் திறனை மேம்படுத்த பயிற்சிகள் போன்றவை வழங்கப்படுகின்றன. உடல் சிகிச்சையாளர் தசை வலிமை மற்றும் சமநிலையை உயர்த்தும் பயிற்சிகளை கற்றுக்கொடுக்கிறார். ஊட்டச்சத்து நிபுணர் தினசரி உணவில் போதுமான புரதத்தை சேர்ப்பது குறித்து வழிகாட்டுகிறார்.
முதியோர் மருத்துவ நிபுணர் டாக்டர் யாங் ஜிஹுய் கூறுகையில், சர்கோபீனியா என்பது வயதுடன் தொடர்புடைய ஒரு மறைந்திருக்கும் பிரச்சனை என்றும், இது விழுதல், மருத்துவமனை சேர்க்கை மற்றும் சுயநிலையிழப்பிற்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கிறார்.
முன்கூட்டியே அபாயத்தில் உள்ள முதியவர்களை கண்டறிந்து, பல துறைகள் இணைந்து செயல்பட்டால், தசைச் சிதைவின் வேகத்தை குறைத்து வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்க முடியும் என்பதே இந்த கிளினிக்கின் முக்கிய நோக்கமாகும்.
எதிர்காலத்தில், இந்த பராமரிப்பு முறை சமூக மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது. முதியோர் சுறுசுறுப்பாக நடக்கவும், நன்றாக சாப்பிடவும், சுயமாக வாழவும் உதவும் புதிய நம்பிக்கையாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது.