சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அமலாக்க அதிகாரிகள் ஒன்றிணைந்து சோதனைச்சாவடிகளில் நடத்திய அதிரடி சோதனையில்,வரி செலுத்த தவறிய 70 பயணிகள் பிடிபட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையை சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் சுங்கத்துறை மற்றும் குடிநுழைவு–சோதனைச்சாவடி ஆணையம் இணைந்து நடத்தியதாக அதிகாரிகள் நேற்று (22.01.26)தெரிவித்தனர்.
சோதனையின் போது 10,000க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 260 வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டன. இதேபோல், நிலம் வழி, கடல் வழி மற்றும் விமான நிலையங்களில் மொத்தம் 14,000க்கும் அதிகமான பயணப் பெட்டிகள் மற்றும் கைப்பைகள் சோதனையிடப்பட்டன.
அதிரடி நடவடிக்கையில், சிகரெட்டுகள், புகையிலைப் பொருட்கள், வரி விலக்கு சலுகைக்கு உட்படாத மதுபானங்கள் மற்றும் பொருள் சேவை வரி இறக்குமதி நிவாரணத்திற்கு உட்படாத பொருட்களுக்கு வரி செலுத்தப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
இதனால் செலுத்தப்படாத வரியின் மொத்த மதிப்பு S$3,398 கணக்கிடப்பட்டது. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மொத்தம் S$21,990 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், இரண்டு பயணிகள் அனுமதிக்கப்பட்ட S$20,000 வரம்பை மீறி ரொக்கம் வைத்திருந்ததாகவும், அதைப் பற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை அல்லது தவறான தகவல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 13 அன்று, 46 வயதான வெளிநாட்டுப் பெண் ஒருவர் S$24,965 மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களை அறிவிக்காமல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அடுத்த நாளான ஜனவரி 14 அன்று, 49 வயதான வெளிநாட்டு ஆடவர் ஒருவர் S$91,789 மதிப்புள்ள ரொக்கக் காசோலைகளை அறிவிக்காமல் சிங்கப்பூரிலிருந்து எடுத்துச் செல்ல முயன்றபோது பிடிபட்டார். அவருக்கு S$9,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சட்ட விதிகளை மீறாமல், வரி மற்றும் ரொக்க அறிவிப்பு விதிகளை பின்பற்றுமாறு பயணிகளுக்கு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.