எச்சரிக்கை..!! ஊழியர்களை குறி வைத்து நடக்கும் மோசடி..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மேலதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து ஊழியர்களிடம் பரிசு அட்டைகள் வாங்கச் சொல்லி நடக்கும் புதிய மோசடி முறைகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சமீப காலமாக, மோசடி கும்பல்கள் ஊழியர்களின் மேலாளர்கள் அல்லது நிறுவன மேலதிகாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு, வேலை தொடர்பான அவசர தேவைகள் என கூறி பரிசு அட்டைகளை வாங்கச் சொல்லும் புதிய தந்திரத்தை பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பணத்தை பறிக்கின்றனர்.
இந்த மோசடி சம்பவங்கள் தொடர்பாக, குறைந்தது 25 புகார்கள் கிடைத்துள்ளதாகவும், மொத்தமாக S$30,000க்கும் அதிகமான தொகை இழப்பாக பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மோசடி செய்பவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் மின்னஞ்சல்களில் பெயர்களை மாற்றி, நிறுவன மேலாளர் அல்லது தலைமை அதிகாரி என நடித்து மின்னஞ்சல் அனுப்புகின்றனர். அதன் மூலம், அவசர வேலை காரணமாக ரேசர், ஆப்பிள், எக்ஸ்பாக்ஸ் போன்ற பிராண்டுகளின் பரிசு அட்டைகளை வாங்குமாறு கூறி, பின்னர் அந்த தொகையை நிறுவனம் திருப்பிச் செலுத்தும் என நம்ப வைக்கின்றனர்.
பரிசு அட்டைகள் வாங்கப்பட்டதும், அதன் மீட்பு குறியீடுகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறார்கள். பின்னர் தங்கள் சக ஊழியர்களிடம் விசாரித்த பிறகே பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் மோசடிக்கு உள்ளானதை உணருகின்றனர்.
இந்த வகை மோசடிகளைத் தவிர்க்க, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக புதிய ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்களை எச்சரிக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்துகிறது.
மேலும், பரிசு அட்டைகளை வாங்குவதற்கான அவசர கோரிக்கைகள் வந்தால் அவற்றை உடனடியாக நம்பாமல், தொலைபேசி அல்லது அதிகாரப்பூர்வ நிறுவன தொடர்பு வழிகள் மூலம் சரிபார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான தகவல்தொடர்புகள் அதிகாரப்பூர்வ நிறுவன மின்னஞ்சல்கள் மூலமே நடைபெற வேண்டும் என்றும், அனுப்புநரின் மின்னஞ்சல் முகவரி உண்மையானதா என்பதை சரிபார்க்க வேண்டும் என்றும் காவல்துறை நினைவூட்டியுள்ளது.
இவ்வகை மோசடிகளை சந்தித்தால், பொதுமக்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 24 மணி நேர ஸ்கேம்ஷீல்டு ஹாட்லைன் 1799 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது scamshield.gov.sg என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.