ஹவ்காங் HDB குடியிருப்பில் நடந்த அதிர்ச்சி தாக்குதல்..!!
சிங்கப்பூர்:ஹவ்காங் பகுதியில் உள்ள இரண்டு HDB அடுக்குமாடி குடியிருப்புகள் மீது கண்ணாடி பளிங்குக் கற்களால் சுடப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதலில் ஜன்னல்களில் மொத்தம் 12 குண்டுத் துளைகள் ஏற்பட்டுள்ளன.அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் 08.02.26 அன்று அதிகாலை, ஹவ்காங் தெரு 51-ல் அமைந்துள்ள 575ஆம் பிளாக்கில் நடைபெற்றது. இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களில் உள்ள இரண்டு வீடுகள் நேரடியாக பாதிக்கப்பட்டன. சம்பவ நேரத்தில் அந்த வீடுகளில் குடியிருப்பாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் மாடியில் வசிக்கும் ஃபாங் ஜிலியாங், அதிகாலை 4 முதல் 5 மணியளவில் திடீரென பல உரத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக கூறினார். ஆரம்பத்தில் அது மின்சார கோளாறு என நினைத்த அவர், பின்னர் ஜன்னல் அருகே தரையில் சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகளைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்தார்.
திரைச்சீலைகளை அகற்றிப் பார்த்தபோது, ஜன்னலில் பல துளைகள் இருந்ததை கண்டதாகவும், தனது வீட்டின் மூன்று அறைகளில் மொத்தம் ஏழு குண்டுத் துளைகள் இருப்பதாகவும் அவர் கூறினார். இரண்டாம் மாடியில் வசிக்கும் அண்டை வீட்டாரின் ஜன்னல்களில் ஐந்து குண்டுத் துளைகள் இருந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதற்கு முன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தமது தாயார் வெடிப்பு சத்தம் கேட்டதாகவும், யாரோ பொருட்களை வீசுகிறார்கள் என நினைத்து அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் ஃபாங் ஜிலியாங் கூறினார். ஜன்னல்கள் மீண்டும் சுடப்படலாம் என்ற அச்சம் காரணமாக, அவற்றை உடனடியாக பழுது பார்க்கும் திட்டம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் கண்ணாடி பளிங்குக் கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறையின் தகவலின்படி,08.02.26 அன்று காலை 7.40 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.