சூதாட்டத்தால் வாழ்க்கையை இழந்த ஒருவரின் வலி நிறைந்த கதை..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் S$800,000 சூதாட்டக் கடனில் சிக்கிய முன்னாள் ஆசிரியர் அலெக்ஸ், தனது வாழ்க்கையும் குடும்பமும் எவ்வாறு சிதைந்தது என்பதை பகிர்ந்துள்ளார். சூதாட்டத்தை விட்டுவிடுவது ஒரு குறுகிய போராட்டம் அல்ல,அது வாழ்நாள் முழுவதும் தொடரும் சவால் என அவர் கூறுகிறார்.
43 வயதான அலெக்ஸ்,இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடும் சூதாட்ட அடிமைத்தனத்தில் சிக்கி, தனது திருமணத்தையும் குடும்ப உறவுகளையும் இழந்தார். இதனால்,கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனப் புத்தாண்டுக்காக கூட அவர் வீட்டிற்குச் செல்லவில்லை.
இளமைக்காலத்தில் சாதாரண விளையாட்டாகத் தொடங்கிய சூதாட்டம், திரைப்படங்களும் நண்பர்களின் தாக்கமும் காரணமாக மெதுவாக அடிமைத்தனமாக மாறியதாக அலெக்ஸ் கூறினார். காலப்போக்கில், ஒரே இரவில் லட்சக்கணக்கான தொகையை இழக்கும் நிலைக்கு அவர் சென்றார்.
இழந்த பணத்தை மீட்டெடுக்கலாம் என்ற தவறான நம்பிக்கையில், அவர் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கடன் வாங்கினார்.இது அவரை மேலும் ஆழமான கடன் சுழலில் தள்ளியது.
கோவிட்-19 காலத்தில் வீட்டில் முடங்கியிருந்த போது, மன அழுத்தத்தை மறைக்க சூதாட்டத்தில் மேலும் மூழ்கினார்.இதன் விளைவாக,குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவரை விட்டு விலக,இறுதியில் விவாகரத்து வரை விஷயம் சென்றது.
நண்பர்களின் ஆலோசனையின் பேரில் சமூக சேவை மையத்தை அணுகிய அலெக்ஸ், தற்போது சூதாட்டத்திலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.தனது அனுபவம் மூலம், இதே பாதையில் செல்லும் மற்றவர்கள் தைரியமாக உதவி நாடி புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.