பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!! அப்பர் தாம்சன் சாலையில் தொடரும் சம்பவங்கள்..!!
சிங்கப்பூர்: அப்பர் தாம்சன் சாலையில் உள்ள மேரிகோல்ட் டிரைவில் உள்ள ஒரு தனியார் வீட்டில் இம்மாதம் 21ஆம் தேதி ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, அருகிலுள்ள தாமான் பெர்மாட்டாவில் உள்ள மற்றொரு தனியார் வீட்டிலும் 17ஆம் தேதி இதேபோன்ற நுழைவு நடந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அன்று இரவு 7:50 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததாகவும், அனுமதியின்றி ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து, போலீசார் வருவதற்கு முன்பே தப்பிச் சென்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கூகுள் வரைபடத் தகவலின்படி, சம்பவம் நடந்த இரண்டு வீடுகளும் சுமார் நான்கு முதல் ஆறு நிமிடங்கள் தொலைவில் உள்ளன. இதனால், இச்சம்பவம் ஒரே நபர் தொடர்புடையதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது செயல்பாடுகள் குறித்து உடனடியாக தகவல் அளிக்கவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற போலீஸ் உதவி எண்ணை தொடர்புகொள்ளவோ அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் மூலம் தகவல் வழங்கவோ கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அனைத்து தகவல்களும் ரகசியமாக கையாளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.