சாபா நிலநடுக்கத்தால் சிங்கப்பூரில் உணரப்பட்ட அதிர்வு..!!

சாபா நிலநடுக்கத்தால் சிங்கப்பூரில் உணரப்பட்ட அதிர்வு..!!

சிங்கப்பூர்: மலேசியாவின் சாபா மாநிலத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் நேற்று(23.02.26) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் சிங்கப்பூர் வரை உணரப்பட்டது. அங்குள்ள கண்காணிப்பு நிலையங்கள் இலேசான நில அதிர்வுகளைப் பதிவுசெய்ததுடன், சில பொதுமக்களும் அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, பதிவான அதிர்வுகள் இப்பகுதியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் அளவுக்கு இணையாக இருந்தன. மேலும், சுண்டா மெகாத்ரஸ்ட் மற்றும் கிரேட் சுமத்ரன் ஃபால்ட் பகுதிகளில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களின் அதிர்வுகளையும் சிங்கப்பூர் முன்பே அனுபவித்துள்ளது.

தேசிய சுற்றுச்சூழல் வாரியத்தின் கீழ் செயல்படும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டதாவது, சாபா நிலநடுக்கம் சிங்கப்பூரிலிருந்து சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், அது 620 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. ஆழமான நிலநடுக்கங்கள் உருவாக்கும் நில அதிர்வு அலைகள் குறைந்த ஆற்றல் இழப்புடன் நீண்ட தூரம் பயணிக்கும் என்பதால் சிங்கப்பூரிலும் அதிர்வு உணரப்பட்டிருக்கலாம் என விளக்கப்பட்டது.

சிங்கப்பூரின் தோ பாயோ, பாலஸ்டியர், பொங்கோல், கிழக்கு கடற்கரை, அங் மோ கியோ, பீஷான் போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள் சமூக வலைதளங்களில் தாங்கள் அதிர்வை உணர்ந்ததாகப் பகிர்ந்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை பகுதியில் வசிக்கும் ஒருவர், “சிங்கப்பூரில் நான் இதுவரை உணர்ந்த அதிர்வுகளில் இது மிகவும் வலிமையானது” என்று தெரிவித்தார்.

அங் மோ கியோவில் வசிக்கும் ஒரு பெண், வீட்டில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும், முதலில் அது ரத்த அழுத்தம் அதிகரித்ததென நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பீஷானிலிருந்து அங் மோ கியோவுக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரது மகளும் அதே நேரத்தில் அதிர்வை உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK