வானில் தோன்றும் அரிய சூப்பர் மூன் காட்சி..!!! எங்கு..?? எப்பொழுது..???
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இன்று(06.10.25)வருடாந்திர மத்திய இலையுதிர் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, நாளை (07.10.25) இரவு இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் “சூப்பர் ஹண்டரின் சந்திரன்”வானில் பிரகாசிக்க உள்ளது.
ஸ்டார்கேசிங் சிங்கப்பூர் அமைப்பின் தகவலின்படி, இந்த சூப்பர் மூன் மாலை 7.03 மணிக்கு உதிக்கும். வானிலை தெளிவாக இருந்தால், மாலை 7.15 மணியளவில் கிழக்கு அடிவானத்தில் சந்திரன் தென்படும். இரவு 10 மணியளவில் அது வானில் உயரமாகவும் தெளிவாகவும் காணப்படும்.
வானியல் அறிக்கைகள் கூறுவதாவது, சந்திரன் முழுமையாக இல்லாவிட்டாலும் 99% பிரகாசத்துடன் இருக்கும். பொதுமக்கள் வானில் வெறும் கண்ணால் பார்க்கும்போது முழு நிலவாகவே தோன்றும்.
அக்டோபர் மாத முழு நிலவு பாரம்பரியமாக “வேட்டைக்காரனின் நிலவு” என அழைக்கப்படுகிறது. இது அறுவடை பருவத்தின் முடிவையும் குளிர்காலத் தொடக்கத்தையும் குறிக்கிறது. இதனை அறுவடை நிலவு, பயண நிலவு அல்லது இரத்த நிலவு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த முழு நிலவு 2025ஆம் ஆண்டில் ஏற்படும் மூன்று சூப்பர் நிலவுகளில் முதன்மையானது. சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருப்பதால், அது வழக்கத்தை விட சுமார் 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் தோன்றும்.
சந்திரனை காண சிறந்த இடங்கள்:
கிழக்கு கடற்கரை பூங்கா, சாங்கி கடற்கரை, மெரினா தடுப்பணை, பாசிர் ரிஸ் பூங்கா போன்ற கிழக்கு நோக்கிய தளங்கள். உயரமான கட்டிடங்கள், கூரைத் தோட்டங்கள் அல்லது பல மாடி கார் நிறுத்துமிடங்களும் சிறந்த பார்வை இடங்களாகும்.
மேலும், சிங்கப்பூர் அறிவியல் மையம் தெரிவித்ததாவது, அக்டோபர் 7 முதல் 10 வரை டிராகோனிட்ஸ் விண்கல் மழை வானில் தெறிக்கும். அக்டோபர் 8 இரவு 8 மணிக்குப் பிறகு இந்த விண்கற் மழையை தெளிவாகக் காண முடியும்.
சூப்பர் மூனும் விண்கல் மழையும் இணைந்து, சிங்கப்பூர் வானில் அரிய அழகைக் காட்சிப்படுத்தவிருக்கின்றன. பொதுமக்கள் இந்நிகழ்வை தவறாமல் கண்டு ரசிக்கவும்.