ஜோகூர் நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிக மூடல்..!!காரணம்..??
சிங்கப்பூர்:மலேசியாவில் உள்ள ஜோகூர் நதியில் ஏற்பட்ட மாசுபாடு சம்பவம் காரணமாக, அங்குள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக செயல்பாட்டை நிறுத்தியுள்ளதாக பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) தெரிவித்துள்ளது.எனினும், சிங்கப்பூரின் நீர் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றும் உறுதிபடுத்தியுள்ளது.
PUB தனது அறிக்கையில், தேவையை பூர்த்தி செய்ய சிங்கப்பூரின் உள்ளூர் நீர்வழிப் பணிகளில் உற்பத்தி அளவை அதிகரித்துள்ளதாகவும், இதனால் குடிநீர் விநியோகத்தில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது. மேலும், ஜோகூர் நதியின் நீர்தரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்,சோதனை முடிவுகள் இயல்பான நிலைக்கு திரும்பியதும், நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மலேசியாவின் சின் சியூ டெய்லி பத்திரிகை,ஜோகூர் நதி மாசுபாடு காரணமாக கோட்டா டிங்கியில் உள்ள பல நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுத்தப்பட்டதாகவும், சில பகுதிகளில் திடீர் நீர் விநியோக இடையூறுகள் ஏற்பட்டதாகவும் செய்தி வெளியிட்டது.
ஜோகூர் மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் லிம் தியான் சூன், மாசுபாட்டின் மூல காரணம் நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மேலுள்ள மணல் அகழ்வு நடவடிக்கைகளாக இருக்கலாம் என்றும், அவற்றில் ஏற்பட்ட வண்டல் குவிப்பு அணை உடைவுக்கு வழிவகுத்ததாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜோகூர் மாநில நீர் ஒழுங்குமுறை ஆணையம் மணல் அகழ்வு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநில சுற்றுச்சூழல் துறை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அணை பழுதுபார்க்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.