சிங்கப்பூர்: பொங்கோலில் உள்ள வாட்டர்வே பாயிண்ட் அடித்தள மட்டத்தில் உள்ள கழிப்பறை குழாய்களில் இருந்து பால் போன்ற வெள்ளை குழாய் நீர் பாய்வது கண்டறியப்பட்டது. இதைப் பார்த்த வாடிக்கையாளர்கள் பலரும் குழப்பமடைந்தனர்.
ஆனால், பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) வெளியிட்ட விளக்கத்தில், இது நீரில் உருவான “சிறிய காற்றுக் குமிழ்கள்” காரணமாக ஏற்பட்டது என்றும், குடிநீரின் தரம் பாதிக்கப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரு இணைய பயனர் வெளியிட்ட காணொளியில், மாலின் கழிப்பறைகளில் இருந்து பால் போன்ற நீர் பாய்வதை காண முடிந்தது. இதே பிரச்சினை மாலில் உள்ள சில காபி கடைகளிலும் ஏற்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து PUB கூறியதாவது, நவம்பர் 19 அன்று இரவு 8 மணியளவில் புகார் கிடைத்ததையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
தண்ணீரில் எந்த அசாதாரணமும் காணப்படவில்லை. மாலின் நீர் விநியோக அமைப்பில் சமீபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதாகவும், அதில் எஞ்சிய காற்று காரணமாக சிறிய குமிழ்கள் உருவாகி, தண்ணீர் பால் போன்ற தோற்றம் பெற்றதாகவும் PUB தெரிவித்தது.
அத்தகைய காற்றுக் குமிழ்கள் சில மணிநேரங்களில் தானாகவே மறைந்து விடும் என்றும், தண்ணீர் குடிப்பதற்கு முழுமையாக பாதுகாப்பானது என்றும் PUB வலியுறுத்தியது.