சிங்கப்பூர்:சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் பூட்டைத் திறக்க அழைக்கப்பட்ட ஒரு பூட்டு தொழிலாளி திடீரென மாரடைப்பால் சரிந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.ஆனால், அந்த வீட்டின் வாடிக்கையாளர் உடனடியாக CPR செய்து அவரது உயிரை வெற்றிகரமாக காப்பாற்றினார்.
இந்த சம்பவம் நவம்பர் 25 ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடந்தது. பிரான்சிஸ் லியோனார்ட் ஃபாசெலோ என்ற அந்த வாடிக்கையாளர், தனது சாவியை வீட்டுக்குள் விட்டுவிட்டதை உணர்ந்து பூட்டை திறப்பதற்காக பூட்டு தொழிலாளியை அழைத்தார். ஆனால் வேலை தொடங்கிய பத்து நிமிடங்களிலேயே தொழிலாளி மயங்கிவிட்டார்.
ஃபாசெலோ உடனே CPR தொடங்கி சுமார் 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தார். “நான் மிகவும் சோர்வாக இருந்தாலும் தொடர்ந்து செய்வதை நிறுத்தவில்லை,உயிர் முக்கியம்,” என அவர் கூறினார். மருத்துவ துறையில் பணிபுரியும் சுவாச சிகிச்சையாளர் ஆன அவர், உயிரைக் காப்பாற்றியதில் பெருமை அடைந்ததாக தெரிவித்தார்.
பூட்டு தொழிலாளி பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்திலிருந்து மீண்டார். அவருக்கு மூளையில் எந்த பாதிப்பும் இல்லை. ஃபாசெலோ, “ஒவ்வொருவரும் CPR கற்றுக்கொள்ள வேண்டும்.அது ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் திறன்,” என வலியுறுத்தினார்.