அப்பர் பூன் கெங் சாலையில் நள்ளிரவு கேட்ட திடீர் வெடிப்பு சத்தம்..!!!
சிங்கப்பூர்: அப்பர் பூன் கெங் சாலையில் உள்ள பிளாக் 11 இல் அமைந்துள்ள ஒரு காபி கடையின் சமையலறை வெளியேற்றக் குழாயில் இன்று (04.12.25) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
அப்பகுதிகளில் திடீரென வெடிப்பு போன்ற சத்தம் கேட்டதாகவும், அதன் பிறகு அடர்ந்த புகை பரவியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் அதிகாலை 12.30 மணியளவில் நடந்தது. அப்பகுதியில் வசிக்கும் திருமதி லு,“முதலில் வழக்கமான சத்தமாகவே நினைத்தேன்.ஆனால் சில நிமிடங்களில் வெடிப்பு போன்ற சத்தம் கேட்டு ஜன்னலைத் திறந்தபோது,எதிரே உள்ள HDB தொகுதியில் இருந்து அடர்ந்த புகை எழுந்ததைப் பார்த்ததாக கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், தீயணைப்பு வீரர்கள் மக்களை வெளியேறச் சொல்லி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். “புகை மிகவும் அடர்த்தியாக இருந்தது. தீ பரவிவிடுமோ என நான் அஞ்சினேன். உடனே என் பெற்றோரிடம் கூறி, அந்த தொகுதியில் உள்ள நண்பர்களுக்குத் தகவல் அனுப்பச் சொன்னேன்,” எனவும் கூறினார்.
சுமார் 10 நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் தீ முழுமையாக அணைக்கப்பட்டதா என்பதை உறுதிசெய்ய தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 3 மணி வரை இடைவிடாது காபி கடையில் வெளியேற்றக் குழாய்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சோதனையிட்டனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்ததாவது, “மீட்புப் பணியாளர்கள் வந்தபோது, காபி கடையின் சமையலறை வெளியேற்றக் குழாய்களில் தீ பற்றி இருப்பதை கண்டதாக தெரிவித்தனர். உடனே அதிகாரிகள் இரண்டு நீர் ஜெட்களைப் பயன்படுத்தி தீயினை அணைத்ததாக தெரிவித்தனர்.
அதிக வெப்பமும் புகையும் காரணமாக,காபி கடையில் உள்ள பல கடைகள் சேதமடைந்தன. புகையை சுவாசித்த ஒருவரை மீட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.