சிங்கப்பூர் – மலேசியா உறவை வலுப்படுத்தும் புதிய கட்டம்..!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கிடையிலான 12வது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் சிங்கப்பூர் வந்துள்ளார்.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் அவரை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
முறைசாரா உச்சிமாநாடு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய தளமாகும்.
குறிப்பாக, பொருளாதாரம், போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் எல்லை ஒத்துழைப்பு உள்ளிட்ட பொதுவான அக்கறை கொண்ட துறைகளில் கூட்டாண்மை குறித்து தலைவர்கள் கலந்துரையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது ஃபேஸ்புக் பதிவில், “இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் உறுதியான உறவுகள், மக்களின் நலனுக்கு பெரிதும் பயனளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆசியான் கூட்டாளிகளாக, பிராந்திய அமைதியையும் நிலைத்தன்மையையும் பேணுவதில் தொடர்ந்து இணைந்து செயல்படுவதாகவும் கூறினார்.