சிங்கப்பூர் கலை ரசிகர்களுக்கான ஒரு மகிழ்ச்சி செய்தி...!!
சிங்கப்பூர்: தென்கிழக்காசியாவின் அனைத்துலக சமகாலக் கலைக் கண்காட்சியான ‘ஆர்ட்ஸ் எஸ்ஜி’ (ART SG) நான்காவது முறையாக சிங்கப்பூருக்குத் திரும்புகிறது. இது சிங்கப்பூர் கலை வாரம் 2026 இன் முக்கிய நிகழ்வாக ஜனவரி 23 முதல் 25 வரை மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறும்.
இந்த ஆண்டின் கண்காட்சியின் கருப்பொருள் “தி ஹியூமேன் ஏஜென்சி” ஆகும். யுபிஎஸ் சுவிஸ் வங்கியின் ஆதரவுடன் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 106 கலைக் காட்சியகங்கள் பங்கேற்கவுள்ளன. இதில் உலகப் புகழ்பெற்ற கலைஞர்களுடன் வளர்ந்து வரும் புதிய கலைஞர்களின் படைப்புகளும் இடம்பெறும்.
தென்கிழக்காசியாவின் கலை வடிவங்களை ஊக்குவிக்கும் “எஸ்.இ.ஏ. ஃபோக்கஸ்” (S.E.A. Focus) எனும் உள்ளூர் தளம் இவ்வாண்டு முதல் முறையாக கண்காட்சியின் பல அங்கங்களை வழிநடத்தும். இதன் மூலம் சிங்கப்பூர், தென்கிழக்காசியாவின் கலை மையமாக வலுவடைவதாகக் கருதப்படுகிறது.
‘ஆர்ட்ஸ் எஸ்ஜி’ கண்காட்சியின் இணை நிறுவனர் மேக்னஸ் ரென்ஃப்ரூ கூறுகையில், இந்த முயற்சியின்மூலம் சிங்கப்பூர் தென்கிழக்காசியாவின் துடிப்பான கலை மையமாகும் பங்கைக் குறிப்பிடத்தக்க வகையில் வலுப்படுத்தும் என தெரிவித்தார்.
மேலும், சிங்கப்பூர் கலை அருங்காட்சியகத்தை ஆதரிக்கும் வகையில், வளர்ந்து வரும் கலைஞர்களின் படைப்புகளைப் பெறுவதற்காக S$1,50,000 நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆர்ட்ஸ் எஸ்ஜி’ கலைக் கண்காட்சி பற்றிய கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள் artsg.com இணையதளத்தையும், சிங்கப்பூர் கலை வாரத்தின் பிற நிகழ்வுகள் குறித்த தகவல்களுக்கு artweek.sg இணையதளத்தையும் பார்க்கலாம்.