சிங்கப்பூர் விமானப்படை வீரருக்கு கிடைத்த சிறப்பு விருது..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் விமானப்படை வீரர் ஒருவர் அருகில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து myResponder செயலி மூலம் எச்சரிக்கை வந்தவுடன், எந்த தயக்கமும் இன்றி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிகாரிகள் வருவதற்கு முன்பே தீயை வெற்றிகரமாக அணைத்தார்.
இந்த துணிச்சலுக்காக விமானப்படை வீரர் வெஸ்லி டானுக்கு “சமூக முதல் பதிலளிப்பாளர் விருது” வழங்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் ஒரு மாலை நேரத்தில் வெளிநாட்டு பயணத்திற்காக பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த போது, அருகாமையில் தீ ஏற்பட்டதாக அவருக்கு தகவல் கிடைத்தது. தீ உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த அவர், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று தீ பரவுவதற்கு முன்பே அதை கட்டுப்படுத்தினார்.
அவசரநிலைகளில் பொதுமக்கள் வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் விதமாக, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அவருக்கு இந்த விருதை வழங்கியது. பாதுகாப்பு என்பது சிங்கப்பூர் விமானப்படையின் அடிப்படை மதிப்புகளில் ஒன்றாக இருப்பதால், முக்கிய தருணங்களில் முன்னேறிச் செயல்பட இது தான் தன்னைத் தூண்டியதாக வெஸ்லி டான் கூறினார்.
இந்தச் செயல் ஒரு குடிமகனின் கடமை என்ற எண்ணத்திலேயே செய்ததாகவும், எந்தப் பாராட்டையும் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்த அவர், மேலும் ஒரு நல்ல சிங்கப்பூர் குடிமகனாக செயல்பட்டதற்கான அங்கீகாரம் தனக்கு கிடைத்தது பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்ததாக கூறினார். அவரது இந்த துணிச்சலான மற்றும் பொறுப்பான செயல்பாட்டை சிங்கப்பூர் விமானப்படையும் பெருமையுடன் பாராட்டியுள்ளது.