வெளிநாட்டு ஊழியரின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவரின் வேலை அனுமதி (WP) ரத்து செய்யப்பட்டு, அவர் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
எட்டோமிடேட் அடங்கிய ‘கேபாட்’ எனப்படும் மின் சிகரெட்டை வைத்திருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 26 வயதான அந்த வெளிநாட்டு ஊழியர் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி பிடிபட்டதாக சுகாதார அமைச்சகமும் (MOH) சுகாதார அறிவியல் ஆணையமும் (HSA) தெரிவித்துள்ளன. அவர் தைவானைச் சேர்ந்தவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மின் சிகரெட்டுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் முழுமையாக பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் அந்த ஊழியருடன் சேர்த்து மொத்தம் 6 வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக MOH மற்றும் HSA தெரிவித்துள்ளன.
அவர்களில் சிலர் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என நினைவூட்டப்பட்டுள்ளது.
விதிகளை மீறும் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி ரத்து செய்யப்படலாம் என்றும், எதிர்காலத்தில் சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு தடையும் விதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, மின் சிகரெட் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் சிங்கப்பூர் அரசு பூஜ்ய சகிப்பு கொள்கையை பின்பற்றுகிறது என்பதைக் காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.