சிங்கப்பூர் கடல் பாதுகாப்பில் டிஜிட்டல் புரட்சி...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கடல் பகுதிகளை மேலும் பாதுகாப்பாக வைத்திருக்கவும், அவசரகால மீட்புப் பணிகளை வேகமாக மேற்கொள்ளவும் புதிய ஆளில்லா வானூர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தொலைவிலிருந்து இயக்கப்படும் இந்த வானூர்திகள், சிங்கப்பூரின் துறைமுகப் பகுதிகளை கண்காணிப்பதற்காக முதன்முறையாகக் களம் இறக்கப்பட்டுள்ளன.
முன்னதாக சம்பந்தப்பட்ட இடத்திற்கே நேரடியாகச் சென்று செயல்படும் நடைமுறையுடன் ஒப்பிடுகையில், இந்த வானூர்திகளை சுமார் 80 விழுக்காடு அதிக வேகத்தில் அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவை மனித தலையீடு இன்றி தானியக்க முறையில் இயங்கக்கூடிய திறன் கொண்டவை.
உலகின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாக விளங்கும் சிங்கப்பூரில், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்ள இத்தகைய அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் அவசியம் என கடல்துறை மற்றும் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.