திரை கதவுகள் புதுப்பிப்பு...!!!பாதுகாப்பிற்கான புதிய பயணம் ஆரம்பம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு சுரங்கப்பாதை வழித்தடங்களில் உள்ள 15 முக்கிய நிலத்தடி ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பிளாட்ஃபார்ம் திரை கதவுகள், அடுத்த மாதத்திலிருந்து புதியதாகப் புதுப்பிக்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் 2027 மார்ச் மாத இறுதிக்குள் முழுமையடையும் என நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பயணிகள் பாதுகாப்பிற்காகச் சேவை செய்து வரும் இந்தத் திரை கதவுகள் புதுப்பிக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பையும், செயல்திறனையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் LTA தனது சமீபத்திய பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
புதுப்பிப்பு பணிகள் நடக்கும் காலத்தில், சுரங்கப்பாதை சேவைகளுக்கும், ரயில்களின் இயக்க அட்டவணைக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என அதிகாரிகள் உறுதிபட கூறியுள்ளனர்.
பயணிகள் வழக்கம்போல் இயக்கப்படும் கதவுகளை பயன்படுத்திக் கொண்டு ரயில்களில் ஏறவும் இறங்கவும் முடியும். மேலும், இந்தப் பணிகள் நடைபெறும் இடங்களில் பயணிகள் பாதுகாப்பிற்காக அறிவிப்புகள் வழங்கப்படும் என்பதையும், அவற்றை கவனமாகப் படித்து செயல்பட வேண்டுமென்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பயணிகள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, பாதுகாப்பான பயண அனுபவத்தை தொடர்ந்தும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.