சிங்கப்பூரில் கிராஞ்சி விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்து..!! 2 பேர் காயம்..!!
சிங்கப்பூர்: கிராஞ்சி விரைவுச் சாலையில் மே 23ஆம் தேதி அன்று இரவு வேளையில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அவருடன் பின் இருக்கையில் இருந்த இருவரும் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் விபத்தில் காயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காயமடைந்தவர்களை கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 65 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது சுயநினைவுடன் இருந்துள்ளார். ஆனால் அவருடன் பயணம் செய்த 62 வயது பெண் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
புக்கிட் தீமா விரைவுச் சாலையை நோக்கி செல்லும் கிராஞ்சி விரைவுச்சாலையில் மே 23ஆம் தேதி அன்று இரவு 9:30 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்த காணொளியில், 2 காவல்துறை வாகனங்கள், இழுவை வண்டி, நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரியின் மோட்டார் சைக்கிள் ஆகியவை ஒரு காவல் துறை வாகனத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் சாய்ந்த நிலையில் ஒரு மோட்டார் சைக்கிள் ஒரு காருக்குப் பின்னால் கிடப்பதும், அவற்றைச் சுற்றி மேலும் சில காவல் துறையின் விசாணைக் குறியீடுகளுக்கான சாதனங்கள் இருப்பதும் தெரிகிறது.
மேலும் இந்த விபத்திற்கு காரணமான 67 வயது கார் ஓட்டுநர் கவனமின்றி வாகனமோட்டிய குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்த விசாரணையில் கார் ஓட்டுநர் உதவி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.