கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள விமான தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அதனை சுற்றியுள்ள 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் விமான மற்றும் விண்வெளி வீரர்கள் பயணிக்க விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
அதில் 7 ஆயிரம் கேலன் மெத்தில் மெத்திகிரிலேட் என்ற ரசாயனம் தொட்டிகளில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த ரசாயனமானது பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தக் கூடியது.
இவை எளிதில் ஆவியாகக் கூடியது மற்றும் தீப்பிடிக்க கூடியதும் கூட. அதனால் முன்னெச்சரிக்கை காரணமாக அருகில் உள்ளவர்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எனினும் ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொட்டி வெடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தொட்டி வெடித்தால் அதிக மக்கள் தொகை கொண்ட அந்த பகுதியைச் சுற்றி பரவலாக நச்சுப்புகை பரவ வாய்ப்புள்ளது.
அவ்வாறு நடந்தால் சுற்றியுள்ள எரிபொருள் ரசாயன தொட்டிகளும் பாதிக்கப்படக்கூடும். இதுவரை இந்த ரசாயன கசிவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ரசாயன கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதுவரை காரணம் கண்டறியப்படவில்லை. ரசாயனம் வைக்கப்பட்டுள்ள 3 தொட்டிகளில் ஒன்றில் மட்டும் தானாக குளிர்விக்கும் வசதி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.