இ-சிகரெட் தடை..!!ஆனால் மறைமுகமாக பெருகும் புதிய ஆபத்து..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த செப்டம்பரில் மின்-சிகரெட் மற்றும் எட்டோமைடேட் துஷ்பிரயோகத்திற்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில பயனர்கள் வேப்பிங்கை நிறுத்தியபோதும் போதைப் பழக்கத்தை முழுமையாக கைவிடாமல், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு போதைப்பொருள் சிகிச்சை மையத்தின் தகவலின்படி, அவர்கள் உதவி செய்த முன்னாள் எட்டோமைடேட் பயனர்களில் 60% பேர் பென்சோடியாசெபைன்கள் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.சமூக சேவை அமைப்புகள், எட்டோமைடேட் அல்லாத பிற பொருட்களுக்கு அடிமையாதல் சிகிச்சை நாடுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளன.
முன்னாள் போதை பொருள் பயனர்கள் கேலாங் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத நடுப்பகுதியில், ஜூ சியாட்டில் உள்ள ஒரு குடியிருப்புப் பிரிவில் போலீசார் நடத்திய சோதனையில், 31 லிட்டருக்கும் அதிகமான இருமல் சிரப் மற்றும் 5,200 க்கும் மேற்பட்ட போதை மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
நவம்பரில் யிஷூன் மற்றும் சாங்கி விமான நிலையத்திலும் இதேபோன்ற அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், சிலர் மருத்துவர்களை மீண்டும் மீண்டும் அணுகி அல்லது தவறான தகவல்களை வழங்கி மருந்துகளைப் பெற முயற்சி செய்வதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது போன்ற பொருத்தமற்ற மருந்து பரிந்துரைகள் தொடர்பான வழக்குகள் மருத்துவ கவுன்சிலின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.