புக்கிட் போ மெய் HDB குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் புக்கிட் போ மெய் சாலையில் உள்ள பிளாக் 108-ல் இன்று(03.01.25) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அருகிலுள்ள சுமார் 20 குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர்.
இன்று பிற்பகல் 1:20 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இந்த தீ விபத்து,அந்தக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பு அலகின் படுக்கையறையில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்த உடனே,சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் அந்த அலகுக்குள் விரைந்து, இரண்டு தண்ணீர் குழாய்களைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
சம்பவம் நிகழ்ந்த நேரத்தில், அந்த அலகுக்குள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் இணைந்து அருகிலுள்ள சுமார் 20 குடியிருப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றினர்.
பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்ததும், குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, படுக்கையறையில் இருந்த மின்சார மிதிவண்டியின் பேட்டரியால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தீ விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பிடத்தக்க வகையில்,கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் இதே HDB தொகுதியின் 12வது மாடியில் உள்ள ஒரு அலகில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து, உள்ளே இருந்த மூன்று பேரை பாதுகாப்பாக மீட்டனர்.