சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பேருந்து வருகை நேரத்தைக் கணக்கிடும் அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை முழுமையாகச் சரிசெய்ய இன்னும் நான்கு நாள்கள் தேவைப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக LTA வெளியிட்ட அறிவிப்பில், சில பேருந்துகளின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பேருந்துகளுக்கும் மத்திய கணினி சேமிப்பகத்துக்கும் இடையிலான தரவுப் பரிமாற்றம் பாதிக்கப்பட்டதாக ஆணையம் கூறியது.இதனால், பயணிகளுக்குக் காட்டப்படும் மதிப்பிடப்பட்ட வருகை நேரக் கணிப்புகள் துல்லியமாக இல்லை.
இந்தப் பிரச்சினையால் சிங்கப்பூரில் இயங்கும் 5,841 பொதுப் பேருந்துகளில் கிட்டத்தட்ட பாதிப் பேருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோளாறு ஏற்பட்ட பேருந்துகளில் உள்ள கணினி அமைப்புகளை மறுசீரமைக்கும் பணியை பொறியாளர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.வாகனங்களில் உள்ள சாதனங்களை நேரடியாகச் சரிசெய்ய வேண்டியிருப்பதால், இந்தப் பணிகள் முடிவடைய சுமார் நான்கு நாள்கள் ஆகும் என்று LTA தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்பப் பிரச்சினை முதன்முதலில் ஜனவரி 10 அன்று கண்டறியப்பட்டதாகவும், தொடர்ந்து மேலும் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் ஜனவரி 21 அன்று பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேருந்து சேவைகள் திட்டமிட்ட நேர அட்டவணைப்படியே தொடர்ந்து இயங்குகின்றன என்றும், பயணிகள் தேவையற்ற கவலைப்பட வேண்டாம் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் உறுதியளித்துள்ளது.