மாணவர்களிடையே தமிழ் சிந்தனையை செழிக்கச் செய்த சங்க இலக்கியம்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சங்க இலக்கியத்தை மாணவர்களிடமும் பெரியவர்களிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பு தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
கடந்த 10ஆம் தேதி, சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்கப் பள்ளி மாணவர்கள் உட்பட பல்வேறு வயதினரும் கலந்துகொண்டனர். ஒவ்வொரு மாதமும் ஆத்திச்சூடி, அகநானூறு, புறநானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, பதினென் கீழ்கணக்கு போன்ற சங்க இலக்கியப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு அறிமுகவுரை, சிற்றுரை, சிறப்புரை ஆகியவை இடம்பெறுகின்றன.
இந்த மாத நிகழ்ச்சியில் ‘வெண்பா நண்பா’ என்ற சொல்லை மையமாக வைத்து அறிமுகவுரை நிகழ்த்தப்பட்டது. சங்கப் பாடல்களில் இடம்பெறும் சொற்களை அறிமுகப்படுத்துவதே இந்த அங்கத்தின் நோக்கம் என்றும், ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு சொற்கள் தலைப்பாகக் கொடுக்கப்படுவதாகவும் அமைப்பின் தலைவர் திரு எல்ல. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
அறிமுகவுரையில் செல்வி ஜீவஜோதிகா கிருஷ்ணமூர்த்தி ‘வெண்பா நண்பா’ என்ற தலைப்பில் சங்க இலக்கியச் சான்றுகளுடன் உரையாற்றினார். சிற்றுரை அங்கத்தில், எட்டு முதல் பத்து நிமிடங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் உரைகள் வழங்கப்படுகின்றன.
தொடக்கப் பள்ளி முன்னாள் குழுத் தலைவி திருமதி த. சுகந்தி ‘அகநானூற்றின் சிறப்புகள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். புதுச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர் கோ. மாசிலாமணி இணையவழி கலந்து கொண்டு ‘மீனவர் பாடல்களில் காதல் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.கிட்டத்தட்ட இரண்டே கால் மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, வருகையாளர்களுக்கு சங்கக் கால இலக்கியத்தின் சுவையை வழங்கியதாக அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
அடுத்த மாதம் 100வது கூட்டத்தை நடத்தவிருக்கும் ‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பு, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாடல் வரிகள் எழுதும் போட்டி உள்ளிட்ட பல சிறப்பு அங்கங்களை ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் போட்டிகளில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நடுவர்கள் வெற்றியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.