சிங்கப்பூர்:விமானப் பாதுகாப்பு தரவுகளை பகிரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதிலிருந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட ஐந்து ஆசியான் நாடுகள் பறவை மோதல்கள், வலுவான காற்றழுத்த மாற்றங்கள் மற்றும் பிற விபத்துகள் குறித்து 7,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அறிக்கைகளை பரஸ்பரம் பகிர்ந்துள்ளன.
இம்முயற்சி, மூன்று ஆண்டு கால ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது.இதன் நோக்கம், விமானப் பாதுகாப்பு சிக்கல்களை விரைவாகக் கண்டறிந்து, திறம்பட பதிலளிக்கும் வழிமுறைகளை உருவாக்குவதாகும்.
3வது ஆசிய-பசிபிக் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு கருத்தரங்கில், போக்குவரத்துத் துறைக்கான மூத்த துணை அமைச்சர் சன் சூலிங் உரையாற்றியபோது,“கடந்த ஆண்டில் உலகளவில் பல விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன. பாதுகாப்பை உறுதிப்படுத்த நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பு அவசியமாகிறது,”என்று தெரிவித்தார்.
எல்லை தாண்டிய பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கங்கள், தொழில்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு பெருகிய முறையில் முக்கியமானதாக மாறும் என்று சன் சூலிங் கூறினார்.
திறந்த பகிர்வு, பரஸ்பர கற்றல் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் மட்டுமே நாடுகள் தொடர்ந்து விமானப் பாதுகாப்பை மேம்படுத்தவும் புதிய அபாயங்களுக்கு தீவிரமாக பதிலளிக்கவும் முடியும்.
மூன்று நாள் மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட விமானத் துறை நிபுணர்கள், நிர்வாகிகள், மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் பங்கேற்கின்றனர்.இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகப் பங்கேற்பாகும்.
இந்த மாநாடு, சிங்கப்பூர் விமானத் துறையின் உலகளாவிய செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகும்.