தெம்பனிஸ் MRT அருகே நடந்த கத்திக்குத்து சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..??
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தெம்பனிஸ் MRT நிலையம் அருகே நடந்த கத்தி தாக்குதல் சம்பவத்தில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 53 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று (19.12.25) மாலை 5.55 மணியளவில், சம்பவ இடத்தில் கத்தி குத்து தாக்குதல் நடந்ததாக பல அவசர அழைப்புகள் கிடைத்ததை அடுத்து, போலீசார் உடனடியாக அங்கு சென்றடைந்தனர்.
அப்போது காயமடைந்த ஒருவரைக் கண்ட போலீசார், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர், அந்த நபர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், சம்பவ இடம் இரத்தக் கறை படர்ந்திருப்பதை காண முடிகிறது.
இச்சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் 53 வயது நபரின் அடையாளத்தை போலீசார் உறுதிப்படுத்தினர்.
புகார் கிடைத்த ஆறு மணி நேரத்திற்குள், ஆபத்தான ஆயுதத்தை பயன்படுத்தி வேண்டுமென்றே மற்றொரு நபரை காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.