செல்லப்பிராணி பராமரிப்பு நிலையத்தில் பூடில் நாய் மரணம்..!!அலட்சியம் காரணமா..?
சிங்கப்பூர்:தஞ்சோங் கட்டோங்கில் உள்ள ஒரு செல்லப்பிராணி பராமரிப்பு நிலையத்தில் ஒரு பூடில் நாய் உயிரிழந்தது. நாய் உரிமையாளர், சரியான மேற்பார்வை இல்லாததால் தனது செல்ல நாய் இறந்தது என்று குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் 320 தஞ்சோங் கட்டோங் சாலையில் உள்ள “பாவ்சம் சிங்கப்பூர்” என்ற கடையில் நடந்ததது. நாய் உரிமையாளரான 27 வயதான தான்யா தில்லான்,சனிக்கிழமை (01.11.25) சமூக ஊடகங்களில் சிசிடிவி காட்சிகளைப் பதிவேற்றினார்.அதில் தனது நாய் பட்டி,ஒரு செல்லப்பிராணி பராமரிப்பு கடையில் கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.அதன் முன் பாதங்கள் சிக்கிக்கொண்டன.யாரும் அதை மீட்க வரவில்லை.
அந்த காட்சிகளில், நாய் சுமார் 12 நிமிடங்கள் வேதனையுடன் போராடி, இறுதியில் சரிந்து விழுந்தது தெரிகிறது. உரிமையாளரின் கூற்றுப்படி, கடை ஊழியர்கள் அந்த நேரத்தில் அங்கு இல்லை.
நாயின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.மேலும் இறப்புக்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்ட கடை தனது மனவேதனையை வெளிப்படுத்தி, அனைத்து நாய்களையும் அன்புடன் கவனிப்பதாக தெரிவித்துள்ளது.
தேசிய பூங்காக்கள் துறை (NParks) இந்த வழக்கை விசாரித்து வருகிறது. அலட்சியம் உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.