சிங்கப்பூரில் இப்படியும் கடத்தல் முயற்சி அரங்கேறுமா..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தில் இ-சிகரெட்டுகள் மற்றும் இ-சிகரெட் தோட்டாக்களை சலவை சோப்பு பொதிகளுக்குள் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற சம்பவம் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் துல்லியமான கண்காணிப்பின் மூலம் இந்த முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் வெளியிட்ட தகவலின் படி, இந்த சம்பவம் பிப்ரவரி 6 ஆம் தேதி நடந்ததாக இன்று(16.02.26)முகநூல் பதிவு வழியாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ICA இன் ஒருங்கிணைந்த இலக்கு மையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் இலக்கு வாகனத்தை மேலும் ஆய்வு செய்தனர். வாகனத்தின் டிரங்கை ஆய்வு செய்தபோது, “சலவை சோப்பு” என பெயரிடப்பட்டிருந்த இரண்டு பொதிகள் அதிகாரிகளின் சந்தேகத்தை ஏற்படுத்தின.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான சோதனையில், அந்த பொதிகளுக்குள் இரண்டு இ-சிகரெட்டுகள் மற்றும் 210 இ-சிகரெட் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதிகாரிகளின் கண்காணிப்பைத் தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு மறைமுகமாக கடத்தல் முயற்சி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் தொடர்புடைய 39 வயதுடைய சிங்கப்பூர் ஆண் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். பின்னர் வழக்கு மேலதிக விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இ-சிகரெட் வைத்திருப்பதும், விற்பனை மற்றும் இறக்குமதி செய்வதும் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத கடத்தலுக்கு எதிராக அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.