சிங்கப்பூரில் குவிந்த உலக இளம் விஞ்ஞானிகள்..!! ஏன் தெரியுமா..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நடைபெறும் 2026 உலக இளம் விஞ்ஞானிகள் உச்சி மாநாடு, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பங்கேற்பாளர்களுடன் புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஜனவரி 5 முதல் 9 வரை நடைபெறும் இந்த மாநாட்டில், 57 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட இளம் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
சிங்கப்பூர் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாடு, 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து பங்கேற்பு எண்ணிக்கையில் மிகப் பெரியதாக கருதப்படுகிறது. மாநாட்டின் மூலம், உலகம் முழுவதிலுமிருந்து வந்த இளம் விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்றவர்கள் உள்ளிட்ட முன்னணி விஞ்ஞானிகளுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
ஐந்து நாட்கள் நடைபெறும் நிகழ்வில், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், நரம்பியல், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய முழுமையான உரைகள், ஊடாடும் கலந்துரையாடல்கள் மற்றும் வட்டமேசை விவாதங்கள் இடம்பெறுகின்றன. மேலும், பங்கேற்பாளர்கள் A*STAR, NUS, NTU, SMU மற்றும் SUTD போன்ற முன்னணி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் பார்வையிட உள்ளனர்.
உலக அறிவியல் வளர்ச்சியில் இளம் தலைமுறையின் பங்கை வலுப்படுத்தும் இந்த மாநாடு, சிங்கப்பூரை உலகளாவிய அறிவியல் மையமாக மேலும் உறுதிப்படுத்தும் முக்கிய மேடையாக பார்க்கப்படுகிறது.