ஜப்பானில் புயல் காரணமாக 800 விமானப் பயணங்கள் ரத்து..!! டோக்கியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியது என்ன..??
ஜாங்மி புயல் ஜப்பானை நோக்கி வருவதால் டோக்கியோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அந்நாட்டில் இருக்கும் சிங்கப்பூரர்கள் இ-ரெஜிஸ்டர் மூலமாக தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜாங்மி புயலானது ஷிகோகு பிராந்தியத்தின் பசிபிக் கடற்கரை தெற்கு கிங்கி மற்றும் காண்டோ – கோஷின் பிராந்தியம் ஆகிய பகுதிகளுக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என டோக்கியோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும் அந்த பகுதியில் நிலச்சரிவுகள் மற்றும் ஆற்று வெள்ளப்பெருக்கு போன்ற பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புயல் வருவதற்கு முன்பு தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள வெளியேற்ற மையங்களின் இருப்பிடத்தை சரி பார்த்து தேவைப்பட்டால் மிக விரைவாக அங்கிருந்து வெளியேறுமாறும் அந்த மையம் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது.
விமானங்கள், ஷிங்கன்சென் அதிவேக ரயில்கள், படகுகள் மற்றும் பிற பொதுப் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்படும் அல்லது கடுமையாக தாமதமாகும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குடிமக்கள் தங்கள் பயணங்களை முன்னதாகவே திட்டமிட வேண்டும் என்றும் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டி தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அங்கு உள்ள சீன குடிமக்கள் வானிலை மற்றும் சாலை நிலவரங்களை மிகவும் கவனத்துடன் உற்று நோக்க வேண்டும் என்றும் சமீபத்திய தகவல்கள் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளை பெற வேண்டும் என்றும், தங்களது மதிப்பு மிக்க உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டி தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
ஜப்பானில் புயல் காரணமாக சுமார் 800 உள்நாட்டு அனைத்துலக விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சில பகுதிகளுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 60,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை.
இன்று (ஜூன் 3) வடக்கு நோக்கி செல்லும் புயல் பிறகு தோக்கியோவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.