சிங்கப்பூர்: கிளெமென்டி மாலுக்கு வெளியே நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த உள்ளூர் தெருக்கூத்து கலைஞர் ஒருவரை ஒரு நபர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தெருக்கூத்து கலைஞரான வூ யூஃபேன் சமூக ஊடகங்களில் பதிவு வெளியிட்டு, பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வூ யூஃபேன் கூறுகையில், நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது வெள்ளை நிற உடையில் இருந்த ஒருவர் வந்து ஒரு பாடலை பாடுமாறு கேட்டுள்ளார். அவர் கோரியபடி ஒரு ஆங்கில கிறிஸ்துமஸ் கரோலைப் பாடிய பின்னர், அந்த நபர் டிப்ஸ் பெட்டியில் நாணயங்களை வைத்தார். அதன் பின்னர் அவர் மீண்டும் ஒரு பாடலைப் பாடும்படி கேட்டுள்ளார்.அவர் இன்னொரு கிறிஸ்துமஸ் பாடலைப் பாடலாம் என கூறியபோது, அந்த நபர் அதிருப்தியடைந்ததாகவும் கூறப்படுகிறது.
“நான் கேட்ட பாடலைப் பாடச் சொன்னேன், அதற்காக பணம் கொடுத்தேன்” என அந்த நபர் கூறியதாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் வூ யூஃபேன் தெரிவித்தார். இதையடுத்து, ஷாப்பிங் மாலிலிருந்து புகார் அளிக்கப்பட்டதாகவும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
போலீசார் விசாரித்த பிறகும் அந்த நபர், “பாடல் கோரிக்கை கட்டணம்” எனக் கூறி $2 திருப்பிக் கேட்டு வற்புறுத்தியதாகவும், தெருவில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் பணம் வசூலிக்கக் கூடாது என வெளிப்படையாக கூறியதாகவும் வூ யூஃபேன் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நபர் அங்கிருந்தபடியே வீடியோக்கள் எடுத்தும், தொடர்ந்து புகார்கள் அளித்தும் தன்னை தொந்தரவு செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பொது இடங்களில் தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்துவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என கூறிய வூ யூஃபேன், “ஒருவரையொருவர் மதிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அடிப்படை மனித நடத்தையையாவது கடைப்பிடிக்க வேண்டும்” என பொதுமக்களிடம் மனம்விட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.