எதிர்கால சிங்கப்பூருக்கு வலுவான திட்டம் தேவை..!!தொழிலாளர் கட்சியின் கோரிக்கை..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தற்போதைய நிச்சயமற்ற சர்வதேச சூழ்நிலையில் மக்களுடன் விரிவாக கலந்தாலோசித்து, அனைத்து சாத்தியமான விருப்பங்களையும் ஆராய்ந்து, எதிர்காலத்திற்காக மீள்தன்மை கொண்ட தேசத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் கட்சி (WP) வலியுறுத்தியுள்ளது.
நேற்று (17.08.25) பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தேசிய தினப் பேரணி உரைக்கு பதிலளித்து, இன்று (18.08.25) வெளியிட்ட அறிக்கையில், தொழிலாளர் கட்சி, உலகளாவிய நிச்சயமற்ற தன்மை சிங்கப்பூரின் ஆட்சேர்ப்பு மற்றும் ஊதிய வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என குறிப்பிட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் உண்மையான ஊதிய வளர்ச்சி வருடத்திற்கு 0.7% மட்டுமே இருந்ததாகவும்,அதிகரித்து வரும் வாடகை செலவுகள் மற்றும் திறன்கள் தொடர்பான வேலையின்மையை அரசு அவசர பிரச்சினைகளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தது.
தொழில்துறை இடங்களில் JTC தனது பங்கினை விரிவுபடுத்தி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்த வாடகை வசதிகளை வழங்க வேண்டும் எனவும், வேலையின்மை புள்ளிவிவரங்களை சீராக வெளியிட்டு, குறைந்தபட்ச ஊதியத்தை சட்டமாக்க வேண்டும் எனவும் கட்சி பரிந்துரைத்தது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் வேலைவாய்ப்பு நிலப்பரப்பை மாற்றியுள்ளன என்பதையும், இதனால் பல சிங்கப்பூரர்கள் பின்தங்கியுள்ளதாகவும் தொழிலாளர் கட்சி சுட்டிக்காட்டியது. அதற்காக, கல்வி அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகம் இணைந்து, பாடத்திட்டத்தை வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கவும், தொழில்துறை கருத்துக்களை அதிகம் பெறவும் வேண்டுமென வலியுறுத்தியது.