சினிமாவை மிஞ்சிய வைர திருட்டு திட்டம்..!சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிக்கு சிறை தண்டனை..!
சிங்கப்பூரின் சைனா டவுன் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில $200,000 மதிப்புள்ள உண்மையான வைரத்திற்கு பதிலாக போலி வைரத்தை மாற்றி விட்டு தப்பியோட முயன்ற சுற்றுலாப் பயணிகளுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 2 ஆண்டுகள், 2 மாதங்கள் மற்றும் 2 வார சிறை தண்டனையை விதித்துள்ளது.
இந்த சம்பவத்தில் தண்டனை பெற்றுள்ள நபர் 4 1 வயதுடைய மங்ரோலியோ மனோஜ்குமார் குர்ஜிபாய் என்பவர் ஆவார்.
மங்ரோலியாவும் அவரது கூட்டாளி செராசியா மிலன் ரம்னிக்பாயும் (30) சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பே இந்தியாவின் சூரத்தில் அதே வரிசை கொண்ட போலி வைரம் ஒன்றை பிரத்தியேகமாக தயாரித்து எடுத்து வந்துள்ளனர்.
ஜூன் 19ஆம் தேதி அன்று சைனாடவுனில் உள்ள டயனோச்சே நகை கடைக்குள் சென்றுள்ளனர். மிலன் தனது வாய்க்குள் போலி வைரத்தை மறைத்து வைத்திருந்தார்.
மங்ரோலியா கடை மேலாளரிடம் மற்ற நகைகளைக் காட்டுமாறு கூறி, அவரது கவனத்தை திசை திருப்பி உள்ளார். அந்த நேரத்தில் மிலன் தனது வாயிலிருந்த போலி வைரத்தை துப்பிவிட்டு, உண்மையான 4.95 கேரட் வைரத்தை எடுத்து தன் வாய்க்குள் மறைத்துக்கொண்டார்.
அவர்கள் இருவரும் கடையை விட்டு சென்றவுடன் சந்தேகமடைந்த மேலாளர் வைர பரிசோதனை இயந்திரம் மூலம் சரிபார்த்த போது அது போலி என கண்டறியப்பட்டது.
கடையிலிருந்து வெளியேறிய இருவரும் உடனடியாக தங்களது ஹோட்டலில் இருந்து காலி செய்துவிட்டு, இந்தியா திரும்புவதற்காக சாங்கி விமான நிலையத்தின் மூன்றாவது நிலையத்திற்கு சென்றனர்.
எனினும் கடையின் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் துரிதமாக செயல்பட்ட சிங்கப்பூர் காவல்துறை, அவர்கள் குடிவரவுப் பகுதியைத் தாண்டுவதற்கு முன்பே அவர்களைக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து உண்மையான வைரம் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இந்த வழக்கில் மங்ரோலியா குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஜூலை 17ஆம் தேதி அன்று அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கூட்டாளி மிலன் மீதான வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.