சிங்கப்பூர் குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றும் டோங்சின் புதிய திட்டங்கள்..!!
சிங்கப்பூர்: குழந்தைகள் தங்கள் படிப்பு மற்றும் வாழ்க்கையில் முழுமையான வளர்ச்சியை அடைய, மீள்தன்மை, ஆர்வம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் வகையில் டோங்சின் மாணவர் பராமரிப்பு மையம் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்று (14.09.25) நடைபெற்ற டோங்சின் மாணவர் பராமரிப்பு மையத்தின் 10 வது ஆண்டு விழாவில், மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் “பிளேக்வெஸ்ட்” எனப்படும் விளையாட்டு அடிப்படையிலான கற்றல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது STEM, படைப்பாற்றல், எழுத்தறிவு மற்றும் எண் திறன்கள் மூலம் குழந்தைகளின் கற்பனைக்கும் ஆர்வத்திற்கும் ஊக்கம் தரும்.
இந்தத் திட்டம் தற்போது ஏழு மையங்களில் சோதனை முறையில் நடைபெற்று வருகிறது; 2026க்குள் 30 மையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு,5000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைவார்கள்.
மேலும், கல்வி அமைச்சகத்துடன் இணைந்து அதிக தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டுதல் வழங்கும் முன்னோடி திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் சமூக மற்றும் உணர்ச்சித் திறன்கள் வலுப்படுத்தப்படுவதோடு நடனம்,கலை,இசை,விளையாட்டு போன்ற துறைகளில் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பும் கிடைக்கும்.
“ஒவ்வொரு குழந்தையையும் உயர்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தீவு முழுவதும் மையங்களின் வலையமைப்பை விரிவுபடுத்தி, சிங்கப்பூர் குழந்தைகளின் எதிர்காலத்தை மேலும் பிரகாசமாக்குவோம்” என மேடம் லோ யென் லிங் தெரிவித்தார்.