மூத்த தொழிலாளர்களுக்கான பகுதி நேர வேலைவாய்ப்பு மானியம் நீட்டிப்பு..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மூத்த தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில்,பகுதிநேர மறுவேலைவாய்ப்பு மானியத் திட்டம் டிசம்பர் 2027 இறுதி வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, வயதான தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் முதலாளிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மானியத் திட்டத்தின் மூலம், முதலாளிகள் வயதான தொழிலாளர்களுக்கு பகுதிநேர வேலை வாய்ப்புகளை வழங்க ஊக்குவிக்கப்படுவதுடன், அவர்களை தொடர்ந்து பணியில் தக்கவைக்க தேவையான நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நிறுவனங்கள் அனுபவமுள்ள தொழிலாளர்களை பணியிலிருந்து விலகாமல் வைத்திருக்க முடியும் என அரசு கருதுகிறது.
திட்டத்தின் கீழ், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு வயதான தொழிலாளருக்கும் முதலாளிகள் S$2,500 மானியம் பெற முடியும். ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சமாக S$125,000 வரை மானியம் வழங்கப்படும். இந்த மானியத்திற்கான விண்ணப்பங்கள் இன்று (18.12.25) முதல் திறக்கப்படும்.
2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 92 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் வரை 7,500 க்கும் மேற்பட்ட முதலாளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளதுடன், அதன் மூலம் 65,000 க்கும் அதிகமான வயதான தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த மானியத் திட்டத்தின் நியமிக்கப்பட்ட திட்டப் பங்காளியாக சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. மானியத்திற்கு விண்ணப்பிப்பது தொடர்பான கூடுதல் விவரங்களை go.gov.sg/mom-ptrg என்ற இணையதள முகவரியில் பெறலாம்.