நிலவு பயணம் வெற்றி..!! பாதுகாப்பாக பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள் ..!!
ஹூஸ்டன்: நிலவுக்கான பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு 4 விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி இருக்கின்றனர்.
அவர்கள் பயணம் செய்த ஆர்டெமிஸ் – 2 என்ற விண்கலம், பூமியின் வளிமண்டலத்தைக் கிழித்துக்கொண்டு பசிபிக் பெருங்கடலில் நாலாபுறமும் தண்ணீர் சிதறத் தரையிறங்கியுள்ளது.
4 விண்வெளி வீரர்களும் இதுவரை எந்தவொரு மனிதரும் பயணிக்காத வெகுத் தொலைவிற்கு சென்று திரும்பி உள்ளனர்.
ஆர்டெமிஸ் – 2 விண்கலம் பூமியின் சுற்றுப்பாதை மற்றும் 405,554 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலவு உட்பட மொத்தம் 1, 117, 515 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளது.
2028 ஆம் ஆண்டில் நிலவின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்களைக் களம் இறக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது. அதன் முதல் படியாக இந்த பயணம் அமைந்துள்ளது.
சூரியன் மறைவதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்பு விண்கலம் தரையிறங்குவதை நாசா அதன் இணையப் பக்கத்தில் ஒளிபரப்பியுள்ளது.
மீட்புக் குழுவினர் விண்கலத்தில் இருந்த அமெரிக்க வீரர்களான 50 வயது ரீட் வைஸ்மேன், 49 வயது விக்டர் குளோவர், 47 வயது கிறிஸ்டினா கோச் மற்றும் 50 வயது கனடிய விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்ஸனையும் பாதுகாப்பாக மீட்டனர்.
நான்கு வீரர்களும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.