சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்படுத்தப்படவிருந்த பான பாட்டில் மற்றும் கேன்களுக்கு பணத்தைத் திரும்பப் பெறும் கொள்கைக்கான மாறுதல் காலம், மூன்று மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், வைப்புத்தொகை அடையாளம் இல்லாத பழைய பான சரக்குகளை விற்கவும், அழிக்கவும் சில்லறை வணிகங்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது.
இதனால், இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக செப்டம்பர் 30 வரை மாற்றக் காலம் நீடிக்கும் நிலையில், அந்த காலகட்டத்தில் வைப்பு லேபிள் உள்ள மற்றும் இல்லாத பானங்கள் சந்தையில் ஒரே நேரத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது.
சில்லறை விற்பனையாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்த முடிவை தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் எடுத்துள்ளதாக,சுகாதாரம் மற்றும் தகவல் தொடர்புத் துறையின் மூத்த துணை அமைச்சர் டாக்டர் புஜாலி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த திட்டத்தின் படி, 150 முதல் 3000 மில்லி அளவிலான அனைத்து உள்ளூர் பானங்களிலும் மறுசுழற்சி சின்னம் மற்றும் பார்கோடு இருக்க வேண்டும்.பானம் வாங்கும் போது 10 சென்ட் வைப்புத்தொகை செலுத்த வேண்டியிருக்கும், காலியான கொள்கலனை நியமிக்கப்பட்ட மறுசுழற்சி இடத்தில் திருப்பி அளித்த பின்னர் அந்த தொகை திரும்ப வழங்கப்படும்.
உலோக கேன்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களின் மறுசுழற்சியை ஊக்குவிக்கும் இந்த திட்டம், சிங்கப்பூரின் வட்டப் பொருளாதார இலக்குகளை நோக்கிய முக்கியமான முன்னேற்றமாகும் என்றும், வரும் வாரங்களில் திட்டத்தின் லோகோ அடையாளம் மற்றும் கொள்கலன்களை திருப்பித் தரும் இடங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.