சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் சீனாவின் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சீனா வணிக வலையமைப்பு (Business China) சிங்கப்பூரின் ஐந்து பாலிடெக்னிக் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே திறன் மேம்பாடு, பயிற்சி, மற்றும் வெளிநாட்டு பரிமாற்றத் திட்டங்களை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர்கள், சிங்கப்பூர்-சீன இளைஞர் பயிற்சி பரிமாற்றத் திட்டம் (YES),வணிகச் சீன இளைஞர் அறிவு திட்டம் மற்றும் இளைஞர் தலைவர்கள் திட்டம் போன்ற முக்கிய முயற்சிகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவார்கள்.
கருத்தரங்குகள், வெளிநாட்டு பயணங்கள், தொழில் நிபுணர்களுடன் உரையாடல்கள் போன்ற வாயில்கள் மூலம் மாணவர்கள் சீனாவைப் பற்றிய நடைமுறை அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
மேலும், ஆசிரியர் மற்றும் ஊழியர்களும் சீனாவில் குறுகிய கால நியமனங்கள் மற்றும் களப்பயணங்கள் மூலம், அந்த நாட்டின் சமூக-பண்பாட்டு சூழலைப் பற்றி ஆழமான புரிதலைப் பெறும் வாய்ப்பு பெறுகிறார்கள்.
சீன சந்தையை நன்கு அறிந்த சிங்கப்பூர் இளைஞர்களையும் சீனா-சிங்கப்பூர் உறவுகளில் திறமையான கல்வியாளர்களையும் உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என சீனா வணிக நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
உள்துறை மற்றும் சமூக குடும்ப மேம்பாட்டுக்கான நாடாளுமன்றச் செயலாளர் வூ பீமிங் இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறுகையில், பன்முக இன, கலாச்சார, மதச் சூழலில் வளர்ந்த சிங்கப்பூர் இளைஞர்கள் உலகளாவிய பார்வையும் சகிப்புத்தன்மையும் கொண்டவர்கள். ஆங்கிலத்திலும் தாய்மொழியிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளதால், உலக அரங்கில் ஒரு தனித்துவமான பங்கு வகிக்கத் தகுதியானவர்கள் என அவர் வலியுறுத்தினார்.