குஜராத் மாநிலத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு..!! 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் காட்லோடியா (Ghatlodia) பகுதியில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள பல குடியிருப்பு வளாகங்களைச் சேர்ந்த மக்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அகன்ஷா, நவரத்னா, வந்தே மாதரம், விநாயக் உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடந்த சில நாட்களாக துர்நாற்றம் மற்றும் மாசுபட்ட குடிநீர் வருவதாக மாநகராட்சியிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாததால் பாதிப்பு அதிகரித்ததாக குடியிருப்பாாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதிகாரப்பூர்வமாக சுமார் 50 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக அகமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இருப்பினும், உள்ளூர் மக்கள் மற்றும் குடியிருப்பு நிர்வாகிகள் 500 முதல் 1,000 பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜந்தாநகர் சந்திப்பு பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு மற்றும் அருகிலிருந்த கழிவுநீர் குழாய் சேதமடைந்ததே இந்த மாசுபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து மாநகராட்சி மருத்துவக் குழுக்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் டேங்கர்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.